வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் நாட்டின் பிரதமரை திமுக தலைவர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் உதகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத் தலைவர் நந்தலாலா, புலவர் ராமலிங்கம், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன், கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் திராவிடமணி, உதகை சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், கோவை வடக்கு மாவட்டச் செயலர் ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட துணைச் செயலர் ஜே.ரவிக்குமார், உதகை நகர செயலர் ஜார்ஜ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த திருச்சி என்.சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் பெரியார் சிலை தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் ஆளுக்கொரு சட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உண்மையாக குற்றம் செய்தவர்களைக்கூட கைது செய்ய முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை காவி மயமாக்கும் மக்கள் விரோத ஆட்சிக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர். மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் வரும். அப்போது நாட்டின் அடுத்த பிரதமரை ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்றார்.