வன உயிரின வார விழாவையொட்டி, நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் செப்டம்பர் 29 ஆம்தேதி திறன்போட்டிகள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்ட வனத் துறையின் சார்பில் அக்டோபர் மாதத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியம், பேச்சுப்போட்டிகள் வரும் செப்டம்பர் 29 ஆம்தேதி உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள ஓவியப் போட்டியில் எல்.கே.ஜி முதல் வகுப்பு மாணவ, மாணவியர் ஒரு பிரிவாகவும், 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவ, மாணவியர் ஒரு பிரிவாகவும் நடைபெறவுள்ளது.
பிற்பகலில் அரசு கலைக்கல்லூரி வளாகத்திலேயே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகள் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஒரு பிரிவாகவும் நடத்தப்படும். இப்போட்டிகளில் மாணவ, மாணவியர் அதிக அளவில் பங்கேற்க வேண்டுமென மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.