மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில காவல் துறைத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் உதகையில் சனிக்கிழமை நடக்கிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல் துறைத் தலைவர் டி.கே.ராஜேந்திரன், கேரள மாநில காவல் துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா, கர்நாடக மாநில காவல் துறைத் தலைவர் நீலமணி ராஜு, புதுச்சேரி மாநில காவல் துறைத் தலைவர் சுந்தரி நந்தாஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் இக்கூட்டத்தில் 4 மாநிலங்களின் காவல் துறை துணைத் தலைவர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், உளவுத் துறையினர், மதுவிலக்குப் பிரிவினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் மக்களவைத் தேர்தல், தேர்தல் நேரங்களில் மதுபான விற்பனை, மாவோயிஸ்டுகள் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.