நீலகிரி மாவட்டத்தில் இம்மாதம் 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மனித நேய வார விழா கொண்டாடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை மனித நேய வார விழா கொண்டாடப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்தில் மனித நேயம் தொடர்பான கண்காட்சி உதகையில் உள்ள பிரீக்ஸ் பள்ளி அரங்கில் நடத்தப்படுகிறது.
அதேபோல, 25ஆம் தேதி ஆனைகட்டி கிராமத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியில் அனைத்து மதத் தலைவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன தலைவர்கள் மற்றும் சான்றோர்களுடன் நல்லிணக்கக் கூட்டங்கள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டக் கூறுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
26ஆம் தேதி பொக்காபுரம் தொட்டலிங்கி கிராமத்தில் பழங்குடியினர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடன் தேநீர் அருந்தும் நிகழ்ச்சி கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
27ஆம் தேதி உதகையில் பிரீக்ஸ் பள்ளி அரங்கில் மனித நேயம் தொடர்பான மாவட்ட அளவிலான நாட்டியம், நாடகம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியும் , 28ஆம் தேதி குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிட மேனிலைப் பள்ளியில் தொண்டு நிறுவனங்கள் மனித நேயம் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும், 29ஆம் தேதி உதகையில் தாட்கோ சார்பில் சமுதாய பொருளாதார முன்னேற்றம் குறித்த சிந்தனைக்கூட்டமும், 30ஆம் தேதி உதகையில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மனித நேய வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இவற்றில் பொதுமக்களும், மாணவ, மாணவியரும் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.