கருவூலத் துறை மூலம் பணம் பெறும் அரசு அலுவலர்களுக்கு கடவுச்சொல்லை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
கருவூலத் துறை, ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் 14 மாவட்ட கருவூலங்கள், 4 சம்பளக் கணக்கு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாட்டுத் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10ஆம்தேதி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட கருவூலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பங்கேற்று பணம் பெறும் அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தப் பயன்பாட்டு குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை வழங்கினார்.
இதன் மூலம் அரசுப் பணியாளர்களின் பதிவேடுகளை பராமரிக்கும் பணி உள்ளிட்டவை எளிமையான முறையிலும், கால விரயத்தை தவிர்க்கும் வகையிலும், இணையதளம் மூலம் செயல்படுத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டல கருவூல கணக்குத் துறை இணை இயக்குநர் செல்வசேகர், நீலகிரி மாவட்ட கருவூல அலுவலர் ராஜா, கூடுதல் கருவூல அலுவலர் இராமரத்தினேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.