காங்கயம் நகராட்சியில் வியாழக்கிழமை (நவம்பர் 15) முதல் 2 நாள்களுக்கு, அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் பா.தேவிகா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :
காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் 20.10.2016 தேதிக்கு முன்னர் மனை கிரயம் செய்த மனைகளில், இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களும், இதுவரை விண்ணப்பிக்காத தனி மனை உரிமையாளர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் 15, 16 ஆகிய இரு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் மனை வரன்முறைப்படுத்தும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமுக்குக் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள், செலுத்த வேண்டிய கட்டண
விவரங்கள் ஆகியவை குறித்து நகராட்சி அலுவலகத்திலும் முக்கிய இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம்.