குண்டடம் வாரச் சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை அவற்றின் விலை குறைந்துள்ளது.
குண்டடம் வாரச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் அதிகாலை 2 மணி முதல் 9 மணி வரை கோழிகள் , ஆடுகள் விற்பனை நடைபெறும். பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை மாட்டுச் சந்தை கூடுகிறது. மாட்டுச் சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம், பூளவாடி, திருப்பூர், மேச்சேரி மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்காக சிந்து இன மாடுகள், வளர்ப்புக் கன்றுகள், கிடாரிகள் காளைக் கன்றுகளைக் கொண்டு வருகின்றனர்.
உதகை, ஈரோடு, கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து மாடுகளை வாங்கிச் செல்கின்றனர். வாரம்தோறும் சுமார் 3 ஆயிரம் மாடுகள் இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகின்றன.
இது குறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:
குண்டடம் வாரச் சந்தைக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டன. கார்த்திகை மாதம் இறைச்சிக் கடைகளில் விற்பனை மந்தமாக இருக்கும் என்பதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் அவற்றின்விலை குறைந்துள்ளது.
கடந்த வாரம் ரூ. 55 ஆயிரம் வரை கறவை மாடு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ. 40 ஆயிரத்துக்கு விலைபோனது. ரூ. 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட வளர்ப்புக் கிடாரி இந்த வாரம் ரூ.14 ஆயிரத்துக்கு தான் விற்கப்பட்டது. இறைச்சிக்காக ரூ. 25 ஆயிரம் வரை விலைபோன மாடு இப்போது ரூ. 20 ஆயிரத்துக்குதான் விற்கப்பட்டன. விலை வீழ்ச்சியால் மாடுகளை விற்பதற்காகக் கொண்டு வந்த வியாபாரிகள், விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கார்த்திகை, மார்கழி மாதம் வரை விலை வீழ்ச்சி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.