பாஜகவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியுள்ள பிரசார இயக்கம் வரும் 23ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைகிறது என கட்சியில் மாநில துணைத் தலைவர் சுப்பராயன் கூறினார்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
இந்தியாவில் பிரித்தாளும் கொள்கையை பாஜக செயல்படுத்தி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டங்களைப் புகுத்தி ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. ஜிஎஸ்டி, பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முற்றிலும் நலிவடைந்துள்ளன. இந்த நிலை நீடித்தால் திருப்பூர் பனியன் தொழில் அழிவது நிச்சயம்.
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே பாஜகவின் வேஷத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆறு முனைகளில் இருந்து பிரசார பேரியக்கம் துவங்கியுள்ளது. வேலூர், சென்னை, வேதாரண்யம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுச்சேரி, ஆகிய ஆறு இடங்களில் துவங்கிய இந்த பிரசார பேரியக்கம் செப்டம்பர் 23ஆம் தேதி திருப்பூர் ராயபுரம் ரவுண்டானாவில் நிறைவடைகிறது என்றார்.