மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.49 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை செய்யப்படுகிறது. இந்த வார ஏலத்துக்கு வேளாங்கண்ணி, திண்டுக்கல், மூலனூர், கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 230 விவசாயிகள் 84,298 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அன்னூர், சோமனூர், உடுமலை, பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பருத்தி வாங்குவதற்காக வணிகர்கள் வந்திருந்தனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
இதில் ஒரு குவிண்டால் ரூ.4,500 முதல் 6,710 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.5,700. இவற்றின் விற்பனைத் தொகை ரூ.49 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.
கடந்த வாரத்தை விட வரத்து அதிகமாக இருந்ததால் விலை குவிண்டாலுக்கு ரூ.400 விலை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.