வெள்ளக்கோவில் அருகே புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அரசு மதுக் கடைக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த பேனர் வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டது.
வள்ளியிரச்சல் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகில் அரசு மதுக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு மதுக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைத்தனர். மேலும், தங்களது கோரிக்கை குறித்து காவல் நிலையத்திலும் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், அந்த பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்த பொது மக்கள் அப்பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், எவ்வித இடையூறுகள் வந்தாலும் மதுக் கடை அமைக்கக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகப் பொது மக்கள் தெரிவித்தனர்.