காங்கயம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
காங்கயத்தை அடுத்த முள்ளிப்புரம் அருகே உள்ள உத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (55). விவசாயி. இவர், தனது நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் இருந்த மின் மோட்டாரை இயக்கச் சென்றுள்ளார்.
அப்போது, நிலை தடுமாறிக் கிணற்றில் விழுந்ததாகத் தெரிகிறது. அதில், கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் அவரது தலை மோதியதால் அவர் உயிரிழந்துள்ளார்.
லோகநாதனைக் காணாததால் அவரது மனைவி பர்வதம் அவரைத் தேடி வந்தபோது, கிணற்று நீரில் லோகநாதன் சடலமாக மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காங்கயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.