விவசாயிகளுக்குத் தேவையான நெல் விதைகளை வழங்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் சனிக்கிழமை கூறியதாவது:
அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அலங்கியம், தளவாய்ப்பட்டினம், கொழிஞ்சிவாடி, தாராபுரம் ஆகிய 4 வாய்க்கால்களுக்கு உள்பட்ட பாசனப் பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு அமராவதி அணையில் ஒருபோக சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் விருப்பத்தை அறிந்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பழைய ஆயக்கட்டு விவசாயிகள் உடனடியாக நெல் நடவு செய்ய வேண்டும்.
வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தேவையான சி.ஆர்-1000, சி.ஆர்-50, கோ-51, ஏ.டி.டி-45,46 மற்றும் 37 ஆகிய நெல் ரகங்களில் விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெற்பயிருக்குத் தேவையான அடிஉரம், மேல் உரம் ஆகியவற்றை வழங்கவும், நோய்த் தாக்குதலில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க இயற்கை மருந்துகளைப் பரிந்துரைக்கவும் அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள சிறுகுறு விவசாயிகள் எந்த வகையிலும் பாதிப்படையாத வகையில் பயிர்க் காப்பீடு செய்ய உதவிட வேண்டும்.
அதேபோல், தனியார் நெல் விதை விற்பனையாளர்கள் நெல் விதைகளின் விலையை கிலோ ரூ.35லிருந்து ரூ.30ஆக குறைத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.