திருப்பூரில் போலீஸ் எனக் கூறி இருசக்கர வாகனத்தை வழிமறித்து பணம் பறித்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர், காங்கயம் சாலை ராக்கியாபாளையம் ஜெய்நகர் 4-ஆவது வீதியில் வசித்து வருபவர் துரைசாமி மகன் ஆனந்த் (48). இவர், நல்லூர் ஈஸ்வரன் கோயில் எம்.ஆர்.ஜி.நகரில் உள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த நபர், ஆனந்தின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து தான் போலீஸ் எனக் கூறி, இருசக்கர வாகனத்துக்கான ஆவணங்களை கேட்டுப் பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஊரக போலீஸாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த செயலில் ஈடுபட்டது கேரள மாநிலம், வண்டிபெரியார் மஞ்சுமலை எஸ்டேட்டை சேர்ந்த விமல் (37) என்பது தெரியவந்தது. இவர் திருப்பூர், முத்தணம்பாளையம் செல்லும் வழியில் உள்ள பொன்முத்து நகர் பகுதியில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஊரக போலீஸார் விமல் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.