திருப்பூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். மேலும், விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, கருணை இல்லங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது, வேண்டும். பிறந்த நாளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும்.
திருப்பூர் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் (திருப்பூர் தெற்கு) சு.குணசேகரன், (திருப்பூர் வடக்கு) கே.என்.விஜயகுமார், (பல்லடம்) கரைப்புதூர் நடராஜன் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.