உபரி நீர் இல்லாமல் ஆண்டு தோறும் கிடைக்கும் உரிமை நீரைக் கொண்டு அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.ஆயிரம் கோடி நிதி ஓதுக்கீடு செய்துள்ளது.
இப்பணியைத் துவங்குவதற்காக பிப்ரவரி 28ஆம் தேதி அவிநாசிக்கு வருகை தரவுள்ள முதல்வரையும் வரவேற்கிறோம். ஆனால், இத்திட்டம் நிரந்தரமாக செயல்பட உபரிநீரைக் கொண்டு செயல்படுத்தாமல், பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றி, உரிமை நீரைக் கொண்டு ஆண்டுதோறும் 14 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
மக்களவைத் தேர்தலையொட்டி விவசாயிகளுக்கு இலவசம், கடன் தள்ளுபடி என்பதெல்லாம் வேண்டாம். விவசாய கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகள் சார்பில் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றார்.