காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் உள்ள முருகன் கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஜனவரி 21) நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தைப்பூச தேர்த் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை (ஜனவரி 21) மாலை 4 மணிக்கு துவங்குகிறது.
விழாவில் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஈரோடு எம்.பி. செல்வகுமார சின்னையன், இந்து அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வாவர்மா உள்பட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.
இதையடுத்து 22ஆம் தேதி திருத்தேர் மலையை வலம் வந்து கிரிவலப் பாதையில் நிலை நிறுத்தப்படும். பின் 23ஆம் தேதி தேர் நிலை அடைகிறது. இந்த 3 நாள்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்சிகள் நடைபெறுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவர். 30ஆம் தேதி தேர்த் திருவிழா நிறைவடைகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் எஸ்.வி.ஹர்சினி, எம்.கண்ணதாசன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.