திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 4 பேரை தெற்கு காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
திருப்பூர் தெற்கு, திருப்பூர் ஊரகம், திருமுருகன்பூண்டி, அனுப்பர்பாளையம் ஆகிய காவல் எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் நகைகளைத் திருடிச் சென்றனர். இது தொடர்பாக மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் துணை ஆணையர் உமா மேற்பார்வையில், திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் ஏ.பிரகாசம், உதவி ஆய்வாளர் விஜயகுமார், காவலர்கள் ரமேஷ், சரவணகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த எம்.வீரபாபு (எ) குட்டி (29), திருவாரூர் மாவட்டம், எண்கண் அஞ்சல், பட்டாகால் காலனியைச் சேர்ந்த ஜி.குருசக்தி (எ) குருவி (30), திருப்பூர், பழவஞ்சிபாளையம் கே.எஸ்.நகரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் (30), கடலூரைச் சேர்ந்த முருகன் (எ) வண்டி முருகன் (30) ஆகிய நான்கு பேருக்குத் தொடர்பு உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேரையும் திங்கள்கிழமை கைது செய்த தனிப்படையினர் அவர்களிடமிருந்து 40 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.