ஒகேனக்கல் வனப் பகுதியில் பெண் யானை இறந்து கிடந்தது.
தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட ஒகேனக்கல் வனப் பகுதிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதியில் இருந்தும், கர்நாடக வனப் பகுதியில் இருந்தும் வறட்சி நிலவும்போது யானைகள் வருவது வழக்கம்.தற்போது ஒகேனக்கல் வனப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள்முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில், ஒகேனக்கல் வனச் சரகத்துக்குள்பட்ட ஊரடி பீட் பகுதியில், 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை புதன்கிழமை இரவு இறந்து கிடந்தது.
இந்தப் பகுதியில் வியாழக்கிழமை காலை வனத் துறையினர் ரோந்து சென்றபோது யானை இறந்ததைக் கண்டனர்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து, வனவிலங்கு கால்நடை மருத்துவர் பிரகாஷ் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. அதில், வயிற்றுப் போக்கின் காரணமாக யானை இறந்துள்ளது தெரியவந்தது. பின்னர் ஒகேனக்கல் வனக் காவலர் கேசவன், வனவர் காளியப்பன் உள்ளிட்டோர் முன்னிலையில் யானை புதைக்கப்பட்டது.