சிட்லிங்கில் பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவம்: இளைஞர் கைது

அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் (22) என்பவரை கோட்டப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்


அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் (22) என்பவரை கோட்டப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) என்பவரைக் கைது செய்தனர்.
முதலாவதாக, பள்ளி மாணவியை இளைஞர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி மாற்றம்:
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் கோட்டப்பட்டி போலீஸார் மீது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிட்லிங் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோடி விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com