மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 3.60 லட்சம் முறைகேடு செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 4 பேர் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வரப்பெற்றன. இதனைத் தொடர்ந்து, உதவி இயக்குநர் நிலையிலான 8 அதிகாரிகள் இப்புகார் தொடர்பாக தணிக்கை செய்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக தணிக்கை பணியில் ஈடுபட்டனர்.
இதில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சந்தானம், மேற்கொண்ட தணிக்கையில், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரகாசனஅள்ளி கிராம ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 3.60 லட்சம் முறைகேடு நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், உதவியாளர் அகமது ஷா, பணி மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் அரகசானஅள்ளி ஊராட்சிச் செயலர் செல்வராஜ் ஆகிய 4 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி உத்தரவிட்டார்.