சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் செயலைக் கண்டித்து, தருமபுரியில் இந்து முன்னணி அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் மாவட்டத் துணைச் செயலர் முரளி தலைமை வகித்தார். உலக இந்து மிஷன் நிர்வாகி காவேரிவர்மன் உள்ளிட்டோரும் பேசினர். சபரிமலையின் புனிதத்தைக் கெடுக்கும் கேரள அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஊத்தங்கரையில்... சபரிமலை கோயிலில் இளம் பெண்களுக்கு அனுமதியளிப்பதை கண்டித்து, ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் இந்துதர்ம சேவா அறக்கட்டளை, இந்து மக்கள் கட்சி, கிராம கோயில் பூசாரிகள் தெய்வீகப் பேரவை இணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
போராட்டத்துக்கு கிராம கோயில் தெய்வீகப் பேரவை தலைவர் அசோக் தலைமை வகித்தார். இறையருள் கௌரி சங்கர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ராமரவிக்குமார், அணி பொதுச் செயலாளர் ரவிபாலா, மாவட்டத் தலைவர் குப்தா,கோட்ட பொறுப்பாளர் ராஜா ஜி.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.