அரூரை அடுத்த சிட்லிங் மலை கிராமத்தில் பழங்குடியின சிறுமியின் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் எஸ்.கமலாமூர்த்தி தலைமை வகித்தார். சிட்லிங் கிராமத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த காவல் துறையினர், அரசு மருத்துவர்கள், காப்பக நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் தமிழக அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம்
இழப்பீடு வழங்க வேண்டும். சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலத் தலைவர் ஆர்.சுசீலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.தேவராசன், மாவட்ட துணைச் செயலர் காசி.தமிழ்க்குமரன், வட்டச் செயலர் என்.அல்லிமுத்து, நகரச் செயலர் பா.முருகன், பொருளாளர் செங்கொடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.