தருமபுரியில் வருகிற அக்.30-ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் வருகிற 30-ஆம் தேதி நடைபெறவுள்ளன. போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. மாவட்ட அளவிலான போட்டிகளில் ஒரு வீரர், ஒரு பிரிவில் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும், குழு போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்று, மாவட்ட மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் சான்று இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை உடன் எடுத்து வர வேண்டும். மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெறுவோர், மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.
எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் இப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.