போச்சம்பள்ளியில் பெண்ணிடம் நூதன முறையில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
போச்சம்பள்ளி அருகேயுள்ள ராசி நகர் பழைய தீயணைப்பு நிலைய சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரசாத் (41) என்பவர் மனைவி கீதா மற்றும் இரு மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த இரு நபர்கள், தாங்கள் கணவரின் உறவினர் என்றும், திருமண பத்திரிகை அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அப்போது மர்ம நபர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீதாவை மிரட்டியுள்ளனர். அவர் கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கநகை, தங்க வளையல் ஆகியவற்றை திருட்டிவிட்டு, அவரின் வாயில் துணியை திணித்து பேசமுடியாமல் செய்து, கழிவறையில் வைத்து பூட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தினார். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.