தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 1,18,097 தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.114.70 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைபெறும் தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2011 முதல் தற்போது வரை 1,18,097 தாய்மார்களுக்கு ரூ.114.70 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 43 பிரசவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது. அடுத்த குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இரு ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். எனவே, இத்திட்டத்தில் முழுத்தொகையைப் பெற தற்காலிக அல்லது நிரந்தரக் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.