தருமபுரி மாவட்டத்தில், சிப்காட், சிட்கோ உள்ளிட்ட தொழிற்பேட்டைகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பகுதி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
வட்டாரத் தலைவர் சிலம்பரசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தாமோதரன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் எழிலரசு, மாவட்டத் தலைவர் வேலாயுதம், மாவட்டத் துணைத் தலைவர் சிவன், வட்டாரச் செயலாளர் லோகு ஆகியோர் பேசினர்.
இந்த மாநாட்டில், மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க, அரசு அறிவித்த, தருமபுரி சிப்காட், பென்னாகரம் சிட்கோ தொழிற்பேட்டைகளை விரைந்து தொடங்க வேண்டும். மலையூர் கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும்.
பாப்பாரப்பட்டி சின்ன ஏரியை தூர்வார வேண்டும். பாப்பாரப்பட்டியிலிருந்து பனைகுளம், வத்திமரத அள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் பழுதடைந்த பாலத்தை சீரமைத்து மீண்டும் பேருந்து இயக்க வேண்டும். பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டாரத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.