தனியார் டயர் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, தனியார் டயர் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.
மொரப்பூர் அருகே ரெட்டிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: மொரப்பூர் அருகே ரெட்டிப்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான டயர் உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த ஆலையிலிருந்து பரவும் கருந்துகள்களால் பயிர்களும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு சுமார் 5 கி.மீ.சுற்றளவில் உள்ள கிராம மக்களுக்கு ஏற்படுகிறது. எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து நிலையக் கடைகளை ஏலம் விட வலியுறுத்தல்: தருமபுரி மாவட்டம், பன்னிக்குளம் ஊராட்சி, திப்பம்பட்டியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு 2017-இல் திறக்கப்பட்டது. இப்பேருந்து நிலையத்தில், 24 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கான ஏலம் இருமுறை அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இதனால், ஊராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்தக் கடைகளுக்கான ஏலத்தை விரைந்து நடத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திப்பம்பட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.