தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில், செவ்வாய்க்கிழமை (பிப்.19) உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதியில் உள்ள உணவுத் தொழில் செய்யும் உணவு வணிகர்கள், உணவகங்கள், மளிகைக் கடைகள், பேக்கரிகள், தேநீர்க் கடைகள், சிறு பெட்டிக்கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவை உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு பெற்று வணிகம் செய்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும். இதுவரை உரிமம் பெறாத அல்லது புதுபிக்க வேண்டியவர்களுக்காக பிப்.19-ஆம் தேதி சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் 4 மணி வரை தருமபுரி நகரப் பேருந்து நிலையம் அம்மா உணவகம் அருகே நடைபெற உள்ளது. எனவே, வணிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஆகியவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.