அரூரில் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) முகுந்தனிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
அரூர் வழியாகச் செல்லும் சென்னை - சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலைத் திட்டம், ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்தச் சாலை செல்லும் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து, எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் 100 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரூரில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) முகுந்தனிடம் ஆட்சேபணை மனுக்களை அளித்தனர்.
இந்த மனுவில், எட்டுவழிச்சாலையில் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் செல்ல எந்ததெந்த இடங்களில் பாலம் அமைக்கப்படுகிறது. நிலத்தின் மதிப்பீடுகள் எவ்வளவு, எட்டுவழிச்சாலைப் பகுதியில் ரயில் பாதை அமைக்கப்படுகிறதா, விவசாயிகளுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளனவா என்பது உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளனர்.
முன்னதாக, அரூர் நடேசா பெட்ரோல் நிலையம் முதல் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரையிலும் விவசாயிகள் எட்டுவழிச்சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக
வந்தனர்.