இளம் வயதில் திருமணங்களை செய்யக் கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அறிவுறுத்தினார்.
அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் அக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பேசியது:
ஆண், பெண் இருவருக்கும் திருமண வயதை எட்டும் வரையிலும் திருமணங்களை செய்யக் கூடாது. இளம் வயதில் திருமணங்கள் செய்வதால், குழந்தைகள் ஊனமாகவும், மனவளம் குன்றியவர்களாகவும் பிறக்க வாய்ப்புள்ளது. இளம் வயதில் திருமணங்கள் செய்து சட்டப்படி குற்றமாகும்.
பெண் சிசுக்களை கொல்வதால், பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே, பெண் சிசுவை கொல்லக் கூடாது. ஆணும், பெண்ணும் சமம். எனவே, ஒவ்வொரு பெற்றோரும் பெண் குழந்தைகளுக்கு தேவையான கல்வியையும், சம உரிமைகளையும் அளிக்க வேண்டும் என்றார்.
இதில், அரூர் வருவாய் கோட்டாட்சியர் ஜி.புண்ணியக்கோடி, இந்திய அரசு மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் சு.வீரமணி, இ.ஆர்.கே. கல்லூரி முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் சி.அருள்குமார், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் கற்பகவடிவு, தருமபுரி பண்பலை வானொலி நிலைய இயக்குநர் ஸ்ரீரங்கம் முரளி, தருமபுரி சைல்டு லைன் இயக்குநர் செயின்தாமஸ், பேராசிரியர் மு.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.