சென்றாயம்பட்டி கிராமத்தில் வாரத்துக்கு ஓருமுறை மட்டுமே ஓகேனக்கல் குடிநீர் வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாவதாக கூறப்படுகிறது.
காரிமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட காளப்பன அள்ளியில் உள்ள சென்றாயம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், சென்றாயம்பட்டி கிராமத்தில் நீர்த்தேவையை பூர்த்தி செய்து வந்த 2 ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் சென்றுவிட்டதாகவும், மின்மோட்டார் பழுதடைந்தும் உள்ளனவாம். இதனால், நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருவதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இதனால் மிகுந்த சிரமமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.