பந்தாரஅள்ளி செல்லியம்மன் கோயில் நிலத்தை பொது ஏலம் விட வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து பந்தாரஅள்ளி, கீழ்சவுளுப்பட்டி, கொட்டவூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளியில் செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இத் திருக்கோயில் திருவிழா உரிமை பந்தாரஅள்ளி, கீழ்சவுளுப்பட்டி, பாப்பாரப்பட்டி (கொட்டாவூர்) மற்றும் கெங்கலேரி ஆகிய 4 கிராம மக்களுக்கு உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தற்போது ஒரு நபருக்கு மட்டுமே குத்தகைவிடப்பட்டுள்ளது. இதனால், கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இக்கோயில் நிலத்தை கால் மற்றும் அரை ஏக்கர் என பிரித்து, பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் விட வேண்டும். இதன்மூலம் கோயிலுக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.