காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
அரூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜி.கே.சலீம். இவர், அரூரில் மதுவிலக்கு அமல் பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த போது, 8.7.2010-இல் அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் நடந்த வாகனச் சோதனையில், லாரியில் கொண்டுவரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் இருந்து 5 முறை சம்மன் அனுப்பியும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஆஜராகவில்லையாம்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஜி.கே.சலீம் நீதிமன்றத்தில் ஆஜராக பிடிவாரண்ட் பிறப்பித்து அரூர் குற்றவியல் நடுவர் கே.வி.சக்திவேல் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.