நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரியும் மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் பெண் ஊழியர் ஒருவர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட ôர்.
நாமக்கல் அன்புநகரை சேர்ந்தவர் இளவரசி. இவர் நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதாரத் துறை நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது- கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. சுகாதாரத் துறை அதிகாரிகள் ஊதியம் வழங்க மறுக்கின்றனர். எவ்விதப் பணியும் வழங்கப்படவில்லை. 2 மாதம் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றார். பெண் ஊழியரின் திடீர் போராட்டத்தால் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நலப் பணிகள் இணை இயக்குநர் எல். உஷா கூறுகையில், நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தில் தற்காலிக டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டராக பணிபுரிகிறார். அவர் அரசு ஊழியர் கிடையாது. ஊதியமும் பார்வையிப்பு தடுப்பு சங்கம் மூலம் வழங்கப்படும். இணை இயக்குநர் அலுவலகத்தில் அவர் பணிபுரியவில்லை. பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தை அவர் அணுக வேண்டும் என்றார்.