மணல் இரண்டாம் விற்பனை கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் லாரியை மறித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே குன்னிபாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது. அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் மணல், குமரிபாளையம் ஊராட்சி, ஊனாங்கல்பட்டியில் இரண்டாம் விற்பனைக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, லாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந் நிலையில், இரண்டாம் விற்பனை கிடங்குக்கு வாடகை உயர்த்திக் கேட்டதால், இருப்பு வைக்க இடமின்றி மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, சின்னபெத்தாம்பட்டி ஊராட்சி குளத்துப்பாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து திங்கள்கிழமை காலை முதல் அரசு மணல் குவாரியில் லாரிகளில் லோடு ஏற்றப்பட்டு, இரண்டாம் விற்பனைக் கிடங்கு அமைந்துள்ள குளத்துப்பாளையம் கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டது. அதற்கு அப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். சாலை பழுதடைந்துவிடும் என்பதுடன், அவ் வழியாகச் செல்லும் குடிநீர்த் திட்டக் குழாய் சேதமடையும் என்பதால், மணல் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. ராஜேந்திரன், மோகனூர் காவல் ஆய்வாளர் சுகுமார், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலையை அகலப்படுத்துவதுடன், குடிநீர் குழாய் பழுதடைந்தால், உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.