பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேற்கு வண்ணாந்துறைப் பகுதியில் பரமத்திவேலூர் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ் வழியாக வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் பொன்மலர்பாளையத்திலிருந்து பரமத்திவேலூருக்கு மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மினி ஆட்டோவின் உரிமையாளரான கொந்தளம் சொக்நாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் மனோஜ் பிரபாகரன் (33), அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சூர்யா (22) ஆகிய இருவரையும் பரமத்திவேலூர் போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், பரமத்தியில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் எஸ்.வாழவந்தியில் சேலத்துக்கு மணல் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்த விஜயேந்திரன் மகனான லாரியின் ஓட்டுநர் சம்பத்தை (30) கைது செய்து, மணல் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சேர்ந்த லாரியின் உரிமையாளர் ரத்தினம் (52) மற்றும் மணலைக் கடத்திய எஸ்.வாழவந்தியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரமேஷ் ஆகிய இருவரையும் பரமத்தி போலீசார் தேடி வருகின்றனர்.