பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொப்பரைத் தேங்காய் ஏலத்தில் கொப்பரைத் தேங்காய் விலை உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்குக் கொண்டு
வருகின்றனர்.
இங்கு தரத்துக்கு தகுந்தார்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 552 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 85.09 பைசாவுக்கும், குறைந்த பட்சமாக ரூ. 78.68 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 80.10 பைசாவுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 38 ஆயிரத்து 248-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 213 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 85.50 பைசாவுக்கும், குறைந்தபட்சமாக ரூ. 81.65 பைசாவுக்கும், சராசரியாக ரூ. 83.15 பைசாவுக்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 16 ஆயிரத்து 140க்கு வர்த்தகம் நடைபெற்றது. கொப்பரைத் தேங்காயின் வரத்துக் குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.