கஜா புயல் இழப்பீடுகளை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் இ.ஆர். ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட கொ.ம.தே.க. பொதுக் குழுக் கூட்டம் ராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற அவர் பின்னர், செய்தியாளர்களிடம் பேசியது:
கஜா புயல் பாதிப்புகளை அதிகாரிகளும், அமைச்சர்களும் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு முடிந்த வரை குறைத்திருக்கின்றனர். இது பாராட்டப்பட வேண்டியது. இன்று எந்த நேரத்திலும் அவசரம் என்றால் முதல்வரையும், அமைச்சர்களையும் சந்திக்க முடியும் என்ற காரணத்தினால்தான் புயல் பாதிப்பு கட்டுப்படுத்த பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் இழப்பீடு எவ்வாறு பெறுவது? என்ற குழப்பத்தில் உள்ளனர். புயல் பாதிப்புப் பணிகளை அரசு வேகமாகக் கணக்கிட்டு மத்திய அரசிடம் முழு இழப்பீட்டுத் தொகைகளைப் பெற்று வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்த வரையில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வலுவாக இருந்தாலும், தமிழக அரசு அதைத் தள்ளிபோடாமல் விரைந்து தேர்தலை நடத்த வேண்டும்.
திருமணி முத்தாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கோரையாற்றில் கலந்திடும் திட்டத்தில் அரசு எந்த ஓர் ஆரம்பக் கட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வர வேண்டும்.
தற்போது ஆளும் கட்சிக்கும் தினகரனுக்கும் இடையே நடப்பது உள்கட்சி சுயநலப் போராட்டம். தேர்தல் வந்தால் இருவரும் இணைந்துகூடச் செயல்படுவார்கள்.
மத்திய அரசு, நாடு முன்னேறுகிறது என்று கூறி வந்தாலும் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.
கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், மாநில விவசாய அணி இணைச் செயலர் டி.எஸ். சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.