பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து ஜேடர்பளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூர் காட்டுவலவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (68), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுள்ளார். திங்கள்கிழமை மதியம் திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அதில், பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.