ராசிபுரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள 41 வணிக வளாக கடைகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ளதால், கடைதாரர்கள் காலி செய்து வருகின்றனர்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதனை ஏலமுறையில் ஒப்பந்த அடைப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மேலும், இந்த கடைகள் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், பல்வேறு கடைகளின் மேல்தளம் பெயர்ந்து விழும் நிலை உள்ளது. மேலும், மழைக் காலங்களில் மழை நீர் கடைகளின் மேல் தளத்தில் இருந்து உள்புகுவதால், இந்த கடைகள் பயன்படுத்துவற்கு ஏற்றதல்ல என பொதுப்பணித் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
இதனால், புதிய பேருந்து நிலையப் பகுதியின் முன்பகுதியில் உள்ள 41 கடைகளை நவ.19-க்குள் அகற்ற வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதனையடுத்து கடைகள் காலி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் திங்கள்கிழமை பெரும்பாலான கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன.