ராசிபுரம் அருகே காக்காவேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் மேற்கூரையைப் பிரித்து வங்கியில் திருட முயன்ற மர்ம நபர்கள், அலாரம் சத்தம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனால், கூட்டுறவு கடன் சங்கத்திலிருந்த ரூ. 5.42 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், நகைகள் தப்பின.
காக்காவேரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளனர். இச் சங்கம் விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள், நகைக் கடன்கள் வழங்கி வருகின்றன. வங்கியின் லாக்கர் அறையில் ரூ.5.42 லட்சம் மதிப்பிலான ரொக்கம், நகைகள் உள்ளனவாம். இச் சங்கத்தில் இரவு காவலர் உள்ளார்.
இந் நிலையில், திங்கள்கிழமை அதிகாலை காவலர் சேகர், வங்கிக்குள் சென்று பார்த்தபோது, வங்கியின் மேற்கூரை பிரிந்த நிலையில் இருந்தது. திருட்டு கும்பல் உள்ளே புகுந்து திருட முயற்சித்திருப்பதும், உள்பக்க லாக்கர் அறையின் கதவுகள் கடைப்பாரையால் நெம்பி உடைக்க முயற்சித்திருப்பதும் தெரியவந்தது.
வங்கியின் அலாரம் சத்தம் கேட்கவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவலர் சேகர், வங்கியின் செயலர் முத்துசாமிக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீஸார், ராசிபுரம் டிஎஸ்பி., காவல்துறை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்தத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.