பருப்பு ஆலை குறித்த பயிற்சி வகுப்பு சிறுமொளசி கிராமத்தில் அண்மையில் நடத்தப்பட்டது.
இதில் வட்டப்பரப்பு, வேட்டுவம்பாளையம், சிறுமொளசி, அத்திபாளையம் , சித்தாளந்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுயஉதவிக் குழு, அம்மா பண்ணை மகளிர் குழுவைச் சார்ந்த பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு எளச்சிபாளையம் பகுதியில் வசந்தம் மாவு மில் நிறுவனத்தை நடத்தி வரும் சக்திவேல் கலந்து கொண்டு மாவு தயாரிப்பில் சிறுதொழில் தொடங்குவது பற்றியும், அதற்கான முதலீடு, வழிமுறைகள், இடவசதி, வங்கி கடன் உதவி பெறுவது பற்றியும் விளக்கமாகவும், தெளிவாகவும் கூறினார். நிறுவனம் மூலம் எந்த மாதிரி சிறுதொழில் செய்யலாம், இயந்திரங்கள் வாங்குவதற்கான வழிமுறைகளை பற்றியும் எளிதாக புரியும்படி கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ்பிரபாகர் கலந்து கொண்டு வேளாண்மை மானியத் திட்டங்களை பற்றி விரிவாக விளக்கினார்.
திருச்செங்கோடு, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். ந. ஹேமலதா, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு அட்மா திட்ட செயல்முறைகளை பற்றியும், உழவன் செயலியின் பதிவிறக்க பயன்களையும் பற்றியும் விளக்கமாகக் கூறினார்.