தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயிலுக்கு வாகனங்களில் சென்று வரும் வகையில், சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தலைமலை சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம். ராஜேஷ், சேந்தமங்கலம் எம்எல்ஏ சி. சந்திரசேகரனிடம் சனிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
சஞ்சீவி மூலிகைக்காக அனுமன் எடுத்துவந்த மலையின் தலைப்பகுதி பூமியில் விழுந்து உருவான மலை என பக்தர்களால் நம்பப்பபடும், சிறப்புவாய்ந்த தலைமலையில் உள்ள சஞ்சீவிராய பெருமாள் கோயிலை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும்.
கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியில் குடிநீர் வசதி, சரியான படிக்கட்டு வசதி, இரவு, அதிகாலை நேரத்தில் மலையேறும் பக்தர்களின் பாதுகாப்பு, மலையின் இயற்கை வளம் பாதுகாப்பு கருதி பாதையில் சூரிய ஒளி மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
பெண் பக்தர்களின் நலன் கருதி மலைப்பாதையில் கழிப்பிட வசதி, படிக்கட்டுகளில் ஆபத்தான இடங்களில் கைப்பிடி வசதி, வழியில் நிழற்கூடங்கள், மலை மீதும், வழியிலும் அவசர, அடிப்படை முதலுதவி மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மலை உச்சியில் உள்ள கோயில் வரை வாகனத்தில் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில், அடிவாரத்தில் இருந்து கோயில் வரை சாலை அமைத்துக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.