குடும்ப பிரச்னை காரணமாக நாமக்கல் நகராட்சி துப்புரவுத் தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது மகள் 3 பேர் ஞாயிற்றுக்கிழமை அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனர்.
நாமக்கல்லை அடுத்த சிவியாம்பாளையம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த வனராஜ் (56). இவர், நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி மற்றும் கீதா(20), புனிதா(17),தேன்மொழி(14) என 3 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே கடந்த சில நாள்களாக குடும்ப பிரசினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த வனராஜ், மனைவி மகாலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் மனமுடைந்த மகாலட்சுமி தனது 3 மகள்களான கீதா, புனிதா, தேன்மொழி ஆகியோருக்கு அரளி விதையை அரைத்துக் கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மகாலட்சுமி, அவரது மகள்கள் 3 பேரும் வீட்டில் மயங்கி கிடந்தனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.