இரட்டைக் கொலை வழக்கில் தம்பதிக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டத்தை அடுத்த பரமத்தி அருகே கீரம்பூர் ஆண்டிப்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). கட்டட மேஸ்திரி. இவரது நண்பர் அண்ணாதுரை (35). லாரி ஓட்டுநராக இருந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி இரவு கடப்பாறை மற்றும் சிமெண்ட் கற்களால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (53), அவரது மனைவி சரஸ்வதி (48), மகன்கள் விமல் ஆதித்தன் (30), விக்ரம் ஆதித்தன் (24) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட ரவிக்கும், பழனிசாமிக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேர் மீதும் பரமத்தி போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் சம்பவத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு அண்ணாதுரையின் மனைவி மகேஸ்வரி அவரது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இதற்கு பழனிசாமிதான் காரணம் என்று நினைத்த அண்ணாதுரை சம்பவத்தன்று தனது நண்பர் ரவியுடன் பழனிசாமி வீட்டுக்குச் சென்று அவரது மனைவி சரஸ்வதியிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் பழனிசாமி, அவரது மனைவி சரஸ்வதி, இரு மகன்கள் சேர்ந்து அண்ணாதுரையை தாக்கினர். இதைத் தடுக்க முயன்ற ரவியையும் அவர்கள் தாக்கினர். இதில் 2 பேரும் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தனசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், திங்கள்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் குற்றம்சாட்டப்பட்ட பழனிசாமி, அவரது மனைவி சரஸ்வதி இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கில் இருந்து விமல் ஆதித்தன். விக்ரம் ஆதித்தன் இருவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.