அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்குமாறு தமிழக அரசிடம் அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சேலம் மண்டல அகில இந்திய ஓய்வூதியர் நலச் சங்கத்தின் சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஓய்வூதியம் உயர்வு மற்றும் சலுகைகள் வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. மண்டல ஆலோசகர் பழனிசாமி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்டத் தலைவர் பழனிமுத்து வரவேற்றார். சங்கத்தின் மாநிலத் தலைவர் கனகராஜ், பொதுச் செயலர் கலியசாமி ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.
இதில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக கோஷ்யாரி கமிட்டி பரிந்துரைத்தபடி ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, தற்போது அமலில் உள்ள ரூ.ஆயிரம் ஓய்வூதியத்தை அனைவருக்கும் முழுமையாக வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இ.எஸ்.ஐ. அல்லது அதற்கு இணையான மருத்துவ வசதி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் மணிவண்ணன், பார்த்தசாரதி, கேசவன், நடராஜன், மோகனூர் சர்க்கரை ஆலை மன்மதன் மற்றும் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.