குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள) குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியான சமூகப் பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் மற்றும் சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருத்தல் அவசியம். ஒரு குழுவில் அதிகபட்சமாக இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். தொடர்ந்து பதவி வகிக்க
இயலாது.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் அதற்கான படிவத்தில், வரும் 15 நாள்களுக்குள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், எண்.16 ஏ, கந்தர் பள்ளி வரிசை, மோகனூர் சாலை, நாமக்கல் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது.