கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை புதன்கிழமை (பிப். 20) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், 117 சாட்சிகள் விசாரணைக்குள்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. 18 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. அதனடிப்படையில், கோகுல்ராஜின் தாய் மற்றும் தோழி, நண்பர்கள், வழக்கில் தொடர்புடைய போலீஸார் ஆஜராகி வருகின்றனர். இதுவரை சுமார் 45 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹெச்.இளவழகன் முன்னிலையில், கோகுல்ராஜின் ரத்த மாதிரியையும், கொலை நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ரத்த மாதிரியையும் ஆய்வு செய்த அலுவலர் நளினா, தன்னுடைய மகன் பெயரில் கோகுல்ராஜ் செல்லிடப்பேசி சிம் கார்டு வாங்கியதாக ரங்கநாதன், தங்களுடைய பெயரில் போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டதாக செல்லம்மாள், பாஸ்கரன் மற்றும் மாதேஷ் உள்ளிட்ட 5 பேரும் சாட்சியம் அளித்தனர். சிபிசிஐடி காவல் ஆய்வாளர் பால்ராஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து, இவ்வழக்கு வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.