சேந்தமங்கலம் வட்டம், பெரியகுளம் கிராமத்தில் குடிநீர் வழங்கக் கோரி மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேந்தமங்கலம் வட்டம், பெரியகுளம் ஊராட்சி படத்தையான்குட்டை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போய்விட்டதால் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாள்தோறும் தண்ணீர் தேவைக்காக அருகில் உள்ள விவசாயக் கிணற்றுக்கு சென்று வரும் சூழல் உள்ளது. அந்தக் கிணறுகளிலும் போதிய நீர் இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து விரக்திக்குள்ளான அவர்கள் வியாழக்கிழமை சேந்தமங்கலம்-ராசிபுரம் சாலையில் படத்தையான்குட்டை பேருந்து நிறுத்தத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் பொன்.செல்வராஜ் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் பேசி, தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.