தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் விடுபட்ட ஏழை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள் வரும் 27 - ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு, குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபட்ட, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள தகுதியான நபர்கள் தங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தை வழங்கி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை நகல், குடும்ப தலை தலைவி வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் நகல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை நகல், தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் எனில் அதற்குரிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தும், பெயர் பட்டியலில் விடுபட்ட நபர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விண்ணப்பத்தை உள்ளாட்சி அலுவலகங்களில் வரும் 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.